[10] நிலமெல்லாம் இரத்தம் – எத்தனை நபிகளை அல்லாஹ் அனுப்பினான்?

(அத்தியாயம் 13.  நபியாக நியமிக்கப்படல்)

[முந்தைய விமர்சன கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

நீங்கள் 13ம் அத்தியாயத்தில் "நபிகள்" பற்றி எழுதியவைகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 

பாரா அவர்கள் எழுதியது:

//முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர்.// 

அருமையான பாரா அவர்களே,  முஹம்மதுவிற்கு முன்பு உலகில் நபிகளாக அறியப்பட்டவர்கள் வெறும் 25 பேர் தானா?  உங்களுக்கு யாரோ தவறான விவரங்களை கொடுத்துள்ளார்கள் அல்லது அரைகுறை விவரங்கள் அடங்கிய ஏதோ ஒரு புத்தகத்தை நீங்கள் படித்திருக்கவேண்டும்.

இஸ்லாமின் படி, குர்-ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் 25 நபிகள் ஆவார்கள்.  ஆனால், குர்-ஆன் முன்மொழியும் யூத கிறிஸ்தவ வேதங்களில் எத்தனை நபிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தொடர் கட்டுரைகளுக்காக நீங்கள் குர்-ஆனை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டீர்களா? அல்லது இதர யூத கிறிஸ்தவ வேதங்களையும் எடுத்துக்கொண்டீர்களா?  மூன்று வேதங்களில் உள்ள விவரங்களை ஒன்று திரட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகின்றது. ஆனால், நபிகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது மட்டும் அரைகுறை விவரங்களை ஏன் எழுதுகிறீர்கள்?

இஸ்லாமின்படி மொத்தம் எத்தனை இறைத்தூதர்கள்?

இஸ்லாமின் படி, அல்லாஹ் உலகம் உண்டானது முதற்கொண்டு, எல்லா நாடுகளுக்கும், அவரவர் மொழிகளில் தனித்தனியே இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறாராம். அதுவும் எல்லா காலக்கட்டத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறாராம், பார்க்க குர்-ஆன் 16:36. 

குர்-ஆன்  16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். ( முஹம்மது ஜான் தமிழாக்கம்)

சில முஸ்லிம்களின் கருத்துபடி ஆதாம் முதற்கொண்டு முஹம்மதுவரை அல்லாஹ் 1,24,000 இறைத்தூதர்களை அனுப்பினாராம் (இது பலவீனமான ஹதீஸின் விவரம் என்று சிலர் சொல்கிறார்கள்). ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும், ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும் (நாடுகளுக்கும்) ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பியிருக்கிறார். அப்படியானால், எத்தனை ஆயிர தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கவேண்டும் பாருங்கள். இந்தியாவிற்கும் அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறார்! (அப்படியா! ஆமாம், குர்-ஆன் அப்படித்தான் சொல்கிறது. இதனை நம்பாதவர்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்துப் பாருங்கள் என்றும் சொல்கிறது. முஹம்மது காலத்துக்கு முன்பிலிருந்து மக்கள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்களே! அப்படியானால், நிச்சயமாக இறைத்தூதர்கள் வந்திருக்கவேண்டுமே!). 

குர்-அனின் படி, மொத்த நபிகள் 25 பேர் மட்டுமல்ல, பார்க்க குர்-ஆன் 40:78, 23:44 & 28:59

குர்-ஆன்  40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.  

23:44. பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம்ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.

28:59. (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.

சில நபிகளின் விவரங்களை மட்டுமே அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியுள்ளாராம், இன்னும் சிலருடையதை சொல்லவில்லையாம். இஸ்லாமின் படி, பல நூறு இறைத்தூதர்களாவது இருந்திருக்கவேண்டுமில்லையா? அப்படியானால், ஏன் வெறும் 25 இறைத்தூதர்களைப் பற்றி மட்டுமே குர்-ஆன் பேசுகின்றது? (இதற்கான பதிலை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்).

ஆக, இஸ்லாமின் படி, பல ஆயிர இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கிறான்.

யூத/கிறிஸ்தவ மார்க்கத்தின் படி எத்தனை இறைத்தூதர்கள்?

முஹம்மதுவிற்கு முன்பு வரை 25 இறைத்தூதர்கள் உலகத்தில் அறியப்பட்டுள்ளார்கள் என்று நீங்கள் சொன்னது எதன் அடிப்படையில்? "இஸ்லாமின் படி"  25 இறைத்தூதர்களின் பெயர் அறியப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எழுதியிருக்கவேண்டும். இஸ்லாம் சொல்லும் கோட்பாட்டை மற்ற மார்க்கங்கள் மீது திணிக்க முயலாதீர்கள். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், இஸ்லாமின் கோட்பாட்டையும் புரிந்துக்கொள்வதிலும் நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். 

யூத மார்க்கத்தின் படி  48 தீர்க்கதரிசிகளை அவர்கள் அடையாளம் காணுகிறார்கள் [1]. இன்னும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், யோவான் ஸ்நானகன் போன்றவர்கள் கூட தீர்க்கதரிசிகளின் பட்டியலில் சேரும் போது எண்ணிக்கை அதிகமாகும். மேலும் "நபிகள் என்றால் யார்?" என்ற வரையறையிலும் இஸ்லாமோடு, கிறிஸ்தவர்கள், யூதர்கள் வேறுபடுகிறார்கள், தேவைப்படும் போது அதனை விளக்குவேன்.

நபிகள் பற்றிய சுருக்கத்தை இங்கு பாருங்கள்: 

இஸ்லாம்  யூத நபிகள் + கிறிஸ்தவ நபிகள் + உலகத்தில் அல்லாஹ் அனுப்பிய இதர அனைத்து நபிகள் + முஹம்மது
 கிறிஸ்தவம்  யூத நபிகள் + கிறிஸ்தவ நபிகள் –  முஹம்மது
 யூத மதம்

 யூத நபிகள் – கிறிஸ்தவ நபிகள்

 (கிறிஸ்தவத்தை ஏற்காத யூதர்கள் கிறிஸ்தவ நபிகளை நம்புவதில்லை.)

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லும்போது, "இஸ்லாமின் நம்பிக்கைப்படி, யூத/கிறிஸ்தவ  நம்பிக்கைப் படி இத்தனை பேர்" என்று தெளிவாகச் சொல்லவேண்டும், அரைகுறையாகச் சொல்லக்கூடாது.

பாரா அவர்கள் எழுதியது:

// அவர்களுள், முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.//

இந்த 17 பேருடைய விரிவான அறிமுகங்கள் குர்-ஆனில் கிடைக்குமா? நிச்சயமாக கிடைக்காது. அப்படியானால், எவைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு, 17 நபர்களின் விரிவான அறிமுகங்கள் கிடைத்துள்ளன என்று எழுதியுள்ளீர்கள்?  நிச்சயமாக நீங்கள் யூத கிறிஸ்தவ வேதங்களின்படித் தான் இதை எழுதியிருப்பீர்கள். அப்படியானால், ஏன் வெறும் 25 நபிகள் அறியப்பட்டுள்ளார்கள் என்று முதலாவது எழுதவேண்டும்? நீங்கள் குர்‍ஆனிலிருந்து மட்டும் எடுத்து ஏதாவது எழுதினீர்கள் என்றுச் சொன்னால், உங்களுக்கு குழப்பங்கள் தான் மிஞ்சும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரா அவர்கள் எழுதியது:

//இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை.முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது. முதலாவது, மோஸஸுக்கு அருளப்பட்ட "தோரா" (குர்ஆன் இதனை "தவ்ராத்" என்று அழைக்கிறது. யூதர்களின் வேதமாக இருப்பது.) அடுத்தது, தாவீத் என்கிற டேவிடுக்கு அருளப்பட்ட சங்கீதம். (Psalm என்று ஆங்கிலத்திலும் ஸபூர் என்று குர்ஆனிலும் குறிக்கப்படுவது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இதனைப் பார்க்கமுடியும்.) மூன்றாவதாக, இயேசுவுக்கு அருளப்பட்ட "இன்ஜீல்" எனப்படும் Gospel). //

முஸ்லிம்களும் ஏற்காத வாதம்:

மறுபடியும் இன்னொரு தவறு. முஹம்மதுவிற்கு முன்பு மூன்று முறைத்தான் வேதங்கள் அருளப்பட்டுள்ளது என்று நீங்கள் எழுதியதை முஸ்லிம்கள் கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.  தோரா, ஸபூர், இன்சில் மட்டுமல்ல, இஸ்லாமின்படி இன்னும் அனேக வேதங்களை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான்.

கீழ்கண்ட வசனங்களில், ஆப்ரஹாமுக்கும் வேதம் (சின்ன புத்தகம்) கொடுத்ததாக குர்-ஆன் சொல்கிறது. ஆனால், பாவம் அந்த வேதத்தையும் ஆபிரகாமும், அவரது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் பாதுகாக்கவில்லை. சில இஸ்லாமியர்களின் கருத்துப்படி, சின்ன வேதம் என்றுச் சொன்னால், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு பக்கங்கள் கொண்ட சுருள்  போல இருக்குமாம்.

குர்-ஆன் 87:18-19, 53:36-37

87:18. நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-

87:19. இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.

53:36. அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

53:37. (அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)

சில முஸ்லிம்கள் கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில், நபி (Prophet) என்றால் அவருக்கு வேதமும் ஞானமும் கொடுக்கப்பட்டு இருக்கும், இறைத்தூதர் (Messenger) என்றால் அவர் முந்தைய வேதங்களை மெய்ப்பிப்பார் என்று பொருள் கொடுக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் 3:81ஐ குறிப்பிடுவார்கள். 

3:81. (நினைவு கூருங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.

இதன் படி பார்த்தால், ஆதாம் முதற்கொண்டு, அல்லாஹ்  அனுப்பிய ஒவ்வொரு நபிக்கும் ஒரு வேதம் என்று கணக்கிட்டால்,  பல நூறு வேதங்கள் ஆகிவிடும்.  நீங்கள் வெறும் குர்-ஆனை மட்டும் மேலோட்டமாக படித்து எழுதியிருக்கிறீர்கள், இனிமேல் நபிகள் பற்றி எழுதும்போது, மேற்கண்ட விவரங்களை கவனத்தில் வைத்துக்கொண்டு எழுதுங்கள். 

பாரா அவர்கள் எழுதியது:

//இயேசுவுக்குச் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு "இறைத்தூதர்" (நபி) என்று அடையாளம் காட்டப்பட்டவர், முகம்மது.//

எங்கு அடையாளம் காட்டப்பட்டார்? குர்-ஆனில் மட்டும் தான், யூத கிறிஸ்தவ வேதங்களில் அல்ல. முஹம்மதுவை நபி என்று நீங்கள் எழுதும் போது, "இஸ்லாமின் படி" என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.  பைபிளின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.  அவர் பைபிளின் தேவன் அனுப்பிய நபி அல்ல. முஹம்மது ஒரு கள்ள நபி என்று கிறிஸ்தவர்கள் ஏன் கருதுகிறார்கள் என்பதை அறிய இக்கட்டுரையை படிக்கவும்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? - 101 காரணங்கள். இக்கட்டுரைகள் இஸ்லாம் பற்றிய தெளிவு அடைவதற்கு உங்களுக்கு அனேக விவரங்கள் உள்ளன, படிக்க மறவாதீர்கள்.

பாரா அவர்கள் எழுதியது:

//முகம்மதுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்குமான வித்தியாசங்கள் பல. வேதம் அருளப்பட்ட விதத்தால் மட்டுமல்ல. தாம் ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்த வகையிலேயே முகம்மது மிகவும் வித்தியாசமானவர். மற்ற தூதர்கள் அனைவரும் எதிர்பாராத ஒரு கணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதன்பேரில் தம்மைத்தாமே இனம் கண்டுகொண்டுவிட்டார்கள். முகம்மது மட்டும், வருடக்கணக்கில் போராடி, உள்ளும் புறமும் ஏராளமான வேதனைகளை அனுபவித்து, ஆன்மிகச் சாதனை முயற்சிகளின் விளைவாக எத்தனையோ உடல் மற்றும் மன உபாதைகளை அனுபவித்து, போராடிப் போராடி, இறுதியில்தான் தாம் "அனுப்பப்பட்டிருப்பதன்" காரணத்தைக் கண்டறிந்தார்.//

நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். மற்ற தீர்க்கதரிசிகள் ஒருவகையாக தெரிவு செய்யப்பட்டார்கள், முஹம்மது மட்டும் வேறு வகையில்  தெரிவு செய்யப்பட்டார் என்று நீங்கள் கண்டுபிடித்தது உண்மை தான். 

முஹம்மதுவிற்கு பிசாசு பிடித்ததா?

பைபிளில் காணப்படும் தீர்க்கதரிசிகளை கவனியுங்கள். அவர்கள் முதலாவது  தேவனை சந்தித்த போது (அ) தேவ தூதரை சந்தித்தபோது, அவர்கள் பயப்பட்டார்கள். ஏனென்றால், கண்ணுக்கு யாரும் தெரியாத போது திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கப்பட்டாலோ, ஒரு அற்புதத்தைக் கண்டாலோ (மோசே எரியும் புதரை பார்த்ததுபோல), மனிதர்களுக்கு முதலாவது பயமுண்டாகும். மேலும் சிலர் தேவனுடைய மகிமையை கண்ட போது செத்தவர்களை போல பயந்து முகங்குப்புற விழுந்துவிட்டார்கள். ஆனால், தேவன் தன்னை அறிமுகம் செய்துவிட்ட பிறகு, உடனே அவர்கள் தெளிவு அடைந்துவிட்டார்கள். அவர்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருக்க தேவன் அனுமதிக்கவில்லை.  இதனால் அவர்கள் பிசாசு பிடித்தவர்கள் போல நடந்துக்கொள்ளவில்லை.  இப்படித் தான் எல்லா நபிகளும் தேவனை சந்தித்தபோது முதலாவது பயந்து, உடனே தெளிவடைந்தார்கள். தற்கொலைக்கு நேராக தேவன் அவர்களை நடத்தவில்லை, அவர்கள் குழப்பத்திலேயே பல நாட்கள்/மாதங்கள்  மனச்சோர்வோடு வாழும் படி தேவன் விடவில்லை.

ஆனால், முஹம்மது முதலாவது காபிரியேல் தூதனை சந்தித்த போது என்ன நடந்தது? பாரா அவர்களே, நீங்களை அதனை விளக்கியுள்ளீர்கள். முஹம்மதுவை  கட்டிப்பிடித்து, அவரை ஆட்டி குளுக்கி ஒரு வழி செய்துவிட்டார். முஹம்மது தனக்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைக்கும் அளவிற்கு  அந்த சந்திப்பு இருந்தது? அதன் பிறகு, அவரின் மனைவி கதிஜா அவர்களும், வராகா என்பவரும் முஹம்மதுவை கொஞ்சம் தேற்றினார்கள். ஆனாலும், பல மாதங்கள் (2 ஆண்டுகளுக்கு மேலாக) முஹம்மது குழப்பத்தில் இருந்தார், இதனால் தற்கொலை முயற்சிகளையும் செய்தார்.  இப்படியெல்லாம் பைபிளின் நபிகளுக்கு நேரிடவில்லை.  முஹம்மதுவிற்கு நடந்தவைகளை பார்க்கும் போது ஒரு பிசாசு பிடித்தவன் போலவே நடந்துக்கொண்டார். தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு மன அழுத்தத்தை, மன நோயை ஒருபோதும் தன் நபிகளுக்கு தேவன் கொடுக்கமாட்டார். ஆனால், முஹம்மதுவின் வாழ்வில் இது நடந்தது. கிறிஸ்தவர்களும், யுதர்களும் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.  பிசாசு பிடித்தவர்கள் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதை அறிய படிக்கவும்: மத்தேயு 8:30-33, 17:14-18.

இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட ஆய்வுக் கட்டுரைகளை படிக்கவும்:

பாரா அவர்கள் எழுதியது:

//இந்த ஆன்மிகக் காரணங்கள் மட்டுமல்ல; மற்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஆன்மிகவாதிகளாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், முகம்மது ஒருவர்தாம் மக்கள் தலைவராகவும், மத்திய ஆசியாவின் தன்னிகரற்ற அரசியல் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். //

இன்னொரு திருத்தம் பாரா அவர்களே.  எல்லா நபிகளும் வெறும் ஆன்மிக தலைவர்களாகவே இருந்தார்கள், முஹம்மது மட்டும்  ஆன்மீக தலைவராகவும், மக்கள் (நாட்டு) தலைவராகவும் இருந்தார்கள் என்று எழுதி இன்னொரு தவறை உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டுள்ளீர்கள்.  முஸ்லிம்கள் சொன்னதை அப்படியே கிளிப் பிள்ளைப்போல எழுதியிருக்கிறீர்கள். 

உங்கள் இஸ்லாமிய நண்பர்களிடம் கீழ்கண்ட கேள்விகளை கேட்டுப்பாருங்கள்:

1) மோசே வெறும் ஆன்மீகத் தலைவரா அல்லது மக்கள் தலைவரா? பல இலட்ச மக்களை எகிப்திலிருந்து விடுதலை செய்வித்து, 40 ஆண்டுகள் அவர்களை வழி நடத்தி வந்த மக்கள் தலைவர் அவர். அவர்களுக்கு ஆன்மீக சட்டங்களையும், நாட்டுக்கு தேவையான சட்டங்களையும் கொடுத்தவர். அவருக்கு பிறகு யோசுவா கூட மக்கள் தலைவராக இருந்தார்.  யூதர்களுக்கு ஒவ்வொரு வம்சத்திற்கு தேவையான இடங்களை ஒதுக்கிக்கொடுத்தவர். 

2) தாவீது வெறும் ஆன்மீகத்தை மட்டும் போதித்த நபியா அல்லது அதோடுகூட ஒரு நாட்டையும் ஆண்டு, போர்கள்புரிந்த மக்கள் தலைவாரா?

3) தாவீதின் குமாரன் சாலொமோன் யார்? வெறும் ஆன்மீகமா? அவர் மக்கள் தலைவராகவும் இருந்து நாட்டை ஆளவில்லையா?

இன்னும் பழைய ஏற்பாட்டில் அனேக நியாயாதிபதிகள் இருந்தார்கள், மேலும் சாமுவேல் போன்ற தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள், இவர்கள் ஆன்மீகவாதிகளாகவும், மக்கள் தலைவர்களாகவும் இருந்தார்கள்.

பாரா அவர்களே, உங்கள் வரிகளை முஸ்லிம்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை. ஆனால், அதே முஸ்லிம்கள் சொன்னதைத்தான் நீங்கள் எழுதி இப்படி மாட்டிக்கொண்டீர்கள் என்பது இன்னொரு கசப்பான உண்மை. (இப்படி எடக்கு மடக்கா இஸ்லாம் பற்றிய விவரங்கள் இருந்தால், பாரா போன்ற எழுத்தாளர்களால் என்ன செய்யமுடியும்?)

முடிவுரை: நீங்கள் தொடர்களை எழுதும்  போது கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இஸ்லாமோடு கூட,  யூத கிறிஸ்தவ புத்தகங்களையும் படித்து இருந்திருக்கலாம்.  உங்கள் தொடர்களுக்கு உதவிய புத்தக பட்டியலைக் கண்டேன், அதில் முதலாவது புத்தகமாக "1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)" என்று எழுதியிருக்கிறீர்கள். இப்படி தொடரின் கடைசி பக்கத்தில், முதலாவதாக "பைபிள்" என்று எழுதி என்ன பயன் சொல்லுங்கள்? அதனை நீங்கள் படிக்கவில்லையே! இப்படி இருக்க எப்படி தவறு இல்லாமல் உங்களால் எழுதமுடியும்.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.  "இல்லை..இல்லை பானையில் இருந்தபடியினால் தானே நான் அகப்பையில் எடுத்து எழுதினேன் என்று சொல்வீர்களானால்", ஆனால்  பானையில் குர்-ஆனின் ஞானம் அல்லாவோ இருந்தது, அகப்பையில் அது தானே வரும், அதைத் தானே நீங்கள் எழுதமுடியும்! முட்செடிகளில் அத்திப்பழங்களை தேடினால் கிடைக்குமா?

உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

No comments:

Post a Comment

நிலமெல்லாம் இரத்தம் - ஓர் விமர்சனம்

திரு. பா. ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு பதில்கள் நிலமெல்லம் இரத்தம் - விமர்சனம் PDF  (7 MB) [1...